Tuesday 10 April 2018

முன் ஜென்ம வாசனை!

SRI:

முன் ஜென்ம வாசனை!

ஒரு காவல்காரன், வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''மகா ஜனங்களே ஜாக்கிரதை'' என்று
கத்திக்கொண்டே போவான்....ராஜா கால வழக்கம்.

ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் மகனிடம் செய்ய சொல்லி சென்று விட்டான்....அவன் மகனோ முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த_பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...

இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு "ஜாக்கிரதை" சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றார்....

அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தார்.

''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், பையன் பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ..... அவனுக்கு கொடும் தண்டனையை கொடுத்து விடுவாரோ?''என்று காவல் காரன் நடுங்கினான்.....

ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தார்? எதற்காக?

முதல் நாள் இரவு பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....

அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் மாறு வேடத்தில் இரவு வலம் வந்த‌ ராஜாவை மயக்கியது.
அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......

#ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........

(1) “மாதா நாஸ்தி பிதா நாஸ்தி 
நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பனும் நிரந்தரமில்லை, பெற்ற தாயும் நிரந்தரமில்லை, அண்ணன், தம்பியும் நிரந்தரமில்லை, காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை,
இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.

(2) “ஜன்மதுக்கம் ஜராதுக்கம் 
ஜாயாதுக்கம் புந;புந: 
சம்ஸார ஸாகரதுக்கம் 
தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும்
துன்பங்கள் மனத்தை மயக்கி இந்த சம்சாரக் கடலில் தள்ளி விடும், வாழ்வே சோகம், மாயம்,ஆகையால் விழித்துக்கொள் ஜாக்ரதை....

(3) “காம; குரோதஸ்ச லோபஸ்ச 
தேஹே திஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய 
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் உன் உடம்பினுள்ளேயே குடியிருக்கும் கொள்ளைக்காரர்களப்பா1....உனதுள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...

(4) “ஆசாயா பத்யதே லோகே : 
கர்மணா பஹு சிந்தயா: 
ஆயுக்ஷீணம் ந ஜாநாதி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

ஆசையெல்லாம் தோசை தான் மனிதா, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமாக கொண்டு அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிக்காதே, இதனால் உனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை நீ அறிய மாட்டாய். விழித்துக் கொள்ளவேண்டாமா?

(5) ஸம்பத: ஸ்வப்ன சங்காஷ: 
யவ்வனம் குசுமோபம்!
வித்ய்த்சாஞ்சலம் ஆயுஷ்யம், 
தஸ்மாத் ஜாக்ரதா! ஜாக்ரதா!

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் போலத்தானடா! , இளமை வயதோ நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறியும் பூவைப் போல உதிர்ந்து விடும். மின்னல் போல தோன்றீ மறையும் இந்த வாழ்க்கை, ஆகையால் விழித்துக் கொள்.

No comments:

Post a Comment